சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள்
பண்டையத் தமிழ் இலக்கியங்களில் அந்தணன், அந்தணர் என்ற
சொற்கள் விரவி வருவதைக் காணலாம். திருக்குறளில் அறவாழி
அந்தணன் என்று இறைவனை இறைஞ்சுவார் குறளாசிரியரான
தேவர் பெருமான். அந்தணர்/அந்தணன் என்ற சொற்கள் பல
சமய இலக்கியங்களில் பயின்று வந்தாலும் அவைகள் ஒரே
பொருளில் ஆளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிலப்பதிகாரத்தில் அந்தணர்/அந்தணன் என்ற சொல்லாட்சி
இன்றைய காலக் கட்டத்தில் ‘அந்தணன்’ அல்லது “அந்தணர்”
என்ற சொல் வைதீகப் பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்
பட்டு வருகிறது. அந்த சொற்கள் பொதுமையாயினும் சமண,
பெளத்த இலக்கியங்களில் அவைகள் சமண/பெளத்தப்
பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டு
வந்திருப்பதையும்க் காணலாம்.
இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தில் மூன்று வகையான
அந்தணர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
1. மாங்காட்டு மறையோன்
2. கோசிகன்
3. மாடல மறையோன்
1. மாங்காட்டு மறையோன்:
காடுகாண் காதையில், கவுந்தியடிகள், கோவலன் மற்றும்
கண்ணகி ஆகியோர் உறையூரை விட்டு நீங்கி ஒரு சோலையின்னுள்
நுழைகின்றனர். அப்போது அங்கிருந்த மண்டபத்தில் மாங்காட்டு
மறையோன் என்ற வயதான வைதிக பிராமணனைச் சந்திக்க
நேரிடுகிறது. அவரை எதிர்க் கொள்ளும் கோவலம் அவனை
வணங்காமல்,
”மாமது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்ஊர்? ஈங்கென் வரவெனக்?
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்..” 1
என்று சற்று அதிகாரத் தொனியிலேயே கேட்கத் துவங்குகிறான்
கோவலன். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது யாதெனில்,
கோவலன், அந்த வயதான மாமது மறையோனை வணங்குவதாக
காட்டவில்லை இளங்கோவடிகள்.
2. கோசிகன் என்ற மறையோன்
உறையூரை விட்டு நீங்கி வெகு தூரம் நடந்து வந்தக் களைப்பினால்,
ஒரு ஊரின் புறமாக அவர்களை தங்க வைத்துவிட்டு தன் காலை
கடனை முடிக்க நீர் நிலையைத் தேடி செல்கிறான் கோவலன்.
அப்போது, மாதவியின் கடிதத்துடன், கோவலனைத் தேடி
எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வந்த கோசிகன் என்ற
அந்தணன், இவன் கோவலனோ என்று ஐயுற்று வினவ,
அதற்கு மறுமொழிக் கூறும் கோவலன்,
“யாது நீ கூறிய உரையீது?, இங்னெத்..”2
என்று கேட்கிறான். அப்போதும் அவனை வணங்குவதாகக்
காட்டவில்லை இளங்கோவடிகள்.
3. மாடல மறையோன் என்னும் அந்தணன்
அடைக்கலக் காதையில் மாடல மறையோன் என்னும்
அந்தணனைச் சந்திக்கும் கோவலன், உடனே அவன்
அடிப் பணிகிறான்.
“இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடிவணங்க
நாவல் அந்தணன் றானவின் றுரைப்பான்” 3
மற்ற அந்தணர்களை வணங்குவதாகக் காட்டாத
இளங்கோவடிகள், மாடலன் என்ற அந்தணனை,
கோவலன் அடி வணங்குவதாகக் காட்டுகிறார்?
ஏன்? நிற்க!
அறக்கள வேள்வியும் மறக்கள வேள்வியும்
இளங்கோவடிகள் தன் காப்பியத்தில் மூன்றுவித வேள்விகளை
நமக்கு காட்டுகிறார்.
1. மறக்கள வேள்வி
2. மதுக்கொள் வேள்வி
3. அறக்கள வேள்வி
1. மறக்கள வேள்வி
முதல் இரண்டும் வைதிகம் சார்ந்தது. மூன்றாவது அவைதிகச்
சார்பு உடையது. மாடல மறையோன் மூன்றாம் பிரிவினன்.
சேரனுக்கு அறிவுரை வழங்கு மாடலன் அரசே மது,
கொலை உடைய மறக்கள வேள்வி செய்யாதே.
கொலையில்லாத அறக்கள வேள்வி செய் என்று
அறிவுறுத்துகிறான்.
“அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோயாயினை “ 4
என்றும்,
“..அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்..” 5
என்று சேரனுக்கு அறிவுறுத்துகிறான் மாடலன்.
இங்கு சொல்லப்பட்ட அறக்கள வேள்வி யாதுனெனின்,
இது அவைதிகச் சார்புக் கொண்ட வேள்வியாம்.அவைதிகப்
பிரிவினரான சமணர்களுக்கும் வேள்வி உண்டென்றும்,
ஆனால் அது உயிர்ப் பலி மற்றும் மது (சோம பானம்)
இல்லாத வேள்வி என்றும் பெறப்படுகிறது. சமணர்கள்
அந்த வேள்வியை ”ஓமம்” என்று அழைக்கிறார்கள்.
(இன்றும் சமணர்கள் புதுமனை புகுவிழாவில் சாந்திநாத
ஓமம் என்ற வேள்வியைச் செய்கிறார்கள் என்பதைக்
கருதவும்)
மாடலன் மறையோன் சமண அந்தணன்
மூன்று அந்தணர்களைக் குறிக்கும் இளங்கோவடிகள்,
கோவலனை மற்ற இருவரையும் அடிவணங்கச் செய்யாமல்,
மாடலன் மறையோனைக் கண்டவுடன் அடிவணங்கச்
செய்தமை இதன் பொருட்டாம்! என்னை?
நான்மறைகள்
இங்கே வாசகர்களுக்கு ஒரு வினா எழுவது இயல்பே?.
நான்மறை என்பது வைதிக வேதங்களைத் தானேக்
குறிக்கும்? என்றால்..
இல்லை. அவைகள் சமண வேதங்களையும் குறிக்கும்.
சமண இலக்கியங்களில் நான்மறை என்றும் வேதம்
என்ற பதங்கள் விரவி வருவதைக் காணலாம்.
சமண வேதங்கள் நான்கு!
ஜைன ஆகமங்களை இரண்டு வகையாகப் பிரிப்பர்.
அவை பூர்வாகமம், அங்காகமம் எனப்படும். பூர்வாகமம்
என்பது என்றும் நிலைத்திருப்பது. ஆதி பகவானால்
அருளப் பட்டது. அங்காகமம் என்பது மனிதர்களால்
எழுதப்பட்டது. ஆதிபகவன் என்று அழைக்கப்படும்
ஆதிநாதரால் அருளப்பட்ட அகமங்கள் நான்கு. இவை
ஜைன வேதங்கள் அல்லது சதுர் வேதங்கள் அல்லது
நான்மறைகள்6 என்றழைக்கப்படுகின்றன. அவைகள்,
1. பிராதமானுயோகம்
2. கரணானுயோகம்
3. சரணானுயோகம்
4. திரவியானுயோகம்
என்பன.
முடிபு:
”அந்தணர் என்போர் அறவோர்”7 என்பது திருக்குறள் வாக்கு.
எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல், எந்த உயிரையும்
வேள்விகளில் பலி கொடுக்காமல் இருப்பவர்கள் தான்
அந்தணர் என்று திருக்குறள் சொல்வது இங்கு
நினைத்தற்பாலது!
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்பு:
1. சிலப்பதிகாரம், காடுகாண் காதை, பாடல் 31 - 33
2. சிலப்பதிகாரம், புறஞ்சேரி இறுத்த காதை, பாடல்: 54
3. சிலப்பதிகாரம், அடைக்கல காதை, பாடல்: 18 - 20
4. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 131 – 132
5. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 177 – 178
6. பதிணென் கீழ்க்கணக்கு, ஏலாதி- கடவுள் வாழ்த்து
” அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்(கு)
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு” – பாடல் – 1
7. திருக்குறள், நீத்தார் பெருமை, பாடல் - 30
1 comment:
//ஜைன வேதங்கள் அல்லது சதுர் வேதங்கள் அல்லது
நான்மறைகள்6 என்றழைக்கப்படுகின்றன. அவைகள்,
1. பிராதமானுயோகம்
2. கரணானுயோகம்
3. சரணானுயோகம்
4. திரவியானுயோகம்//
இது தாங்களாக புனைவது என்பது போலெ தெரிகிறது. ஆதாரம் பண்டைய நூல்கல் மூலம் தர முடியுமா
மேலும் கொடுக்கும் சுட்டி பல கேள்விகளை எழுப்புகிறது
http://tamialrsamayam.blogspot.com/2011/09/blog-post.html
Post a Comment